முன்னுரை:
நான் பிறந்து, வாழ்ந்து வரும் ஊர் புதுச்சேரி. இது புதுச்சேரி மாநிலத்தின் தலைநகரமாகவும் உள்ளது. சிறந்த வணிக நகரமான எங்கள் ஊரின் சிறப்புகளை இக்கட்டுரையில் கூறுகிறேன்.
அமைவிடம்:
புதுச்சேரியின் எல்லைகளாகக் கிழக்கே வங்காள விரிகுடாக் கடலும், மேற்கிலும் வடக்கிலும் விழுப்புரம் மாவட்டமும், தெற்கே கடலூர் மாவட்டமும் அமைந்துள்ளன.
பெயர்க் காரணம்:
அயல் நாட்டு வரலாற்று ஆசிரியர்கள் ‘பொதுக்கே’, ‘பொதுக்கா’ எனக் குறிப்பிடும் பகுதியே இன்று ‘புதுச்சேரி’ எனப் பெயர் பெற்றதாகக் கூறுகின்றனர்.
தொழில்கள்:
எங்கள் ஊர் சிறந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்கு மூன்று நூற்பாலைகள் உள்ளன. மேட்டுப்பாளையம், தட்டாஞ்சாவடி, சேதராப்பட்டு முதலான இடங்களில் தொழில் பேட்டைகள் சிறப்புற இயங்குகிறது. மேலும் சிறந்த வணிக நகரமாக விளங்குகிறது. வேளாண்மையில் நெல், கரும்பு, நிலக்கடலை, பயறு வகைகள் பயிரிடப்படுகின்றன.
சிறப்புமிகு இடங்கள்:
அரவிந்தர் ஆசிரமம், ஆரோவில் சர்வதேச நகரம், மணக்குள விநாயகர் கோவில், அருங்காட்சியகம், கடற்கரை, பாரதி பூங்கா, பாரதியார் நினைவு இல்லம், பாரதிதாசன் நினைவு இல்லம், ஆகியவை புதுச்சேரிக்குப் புகழ் சேர்ப்பவை. ஊசுட்டேரி, சுண்ணாம்பாற்றுப் படகுத் துறை போன்றவை சிறந்த சுற்றுலா தலங்களாக விளங்குகின்றன.
திருவிழாக்கள்:
வில்லியனூரிலும், வீராம்பட்டிணத்திலும் நடைபெரும் தேர்த் திருவிழா புகழ்பெற்றவை. கதிர்காமத்தில் செடல் திருவிழா சிறப்பாக நடைபெரும். வைத்திக்குப்பத்தில் நடைபெரும் மாசிமகம் திருவிழா சிறப்புமிக்கது.
மக்கள் ஒற்றுமை:
இங்கு வாழும் மக்கள் பல இனத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் ஒன்றுபட்டு வாழ்கின்றனர். ஏற்றத்தாழ்வின்றியும் பூசலின்றியும் வாழ்கின்றனர். வேற்றுமையில் ஒற்றுமையை நிலைநாட்டுகின்றனர்.
முடிவுரை:
நான் எங்கள் ஊரான புதுச்சேரியைப் பற்றி எழுதியுள்ளேன். நீங்களும் உங்கள் ஊரின் சிறப்பை எழுதுங்கள்.