Tuesday, 8 June 2021

உழைப்பே உயர்வு

முன்னுரை:

            ஒருவரைப் பல வகையிலும் உயர்த்துவது அவருடைய உழைப்பே ஆகும். உழைப்பு ஒருவரை உயர்த்துவதோடு அவருடைய குடும்பத்தையும், நாட்டையும் உயர்த்தும். அதனால் இக்கட்டுரை உழைப்பின் பயன், அதன் சிறப்பு, நேர்மையான உழைப்பு ஆகியவற்றை விளக்குகிறது.

உழைப்பின் பயன்:

            ஒரு செயலைச் செய்ய வேண்டும் என்று எண்ணுவது பெரிதல்ல. அதனைச் செயல்படுத்தி அதற்கு ஏற்றவாறு உழைக்க வேண்டும். அவ்வாறு, கடுமையாக உழைப்பவர்கள் விதியைக்கூட தூர விரட்டிவிடுவார்கள். கடுமையான உழைப்பிற்கு ஈடு இணை எதுவுமே இல்லை. கடின உழைப்பு ஒருவனை வெற்றியை நோக்கி கைப்பிடித்து அழைத்துச் செல்லும்.

உழைப்பின் சிறப்பு:

            கஞ்சியே ஆனாலும் நம் உழைப்பால் கிடைத்ததாக இருக்க வேண்டும். பறவை, விலங்கினங்கள் உணவைத் தேடிச் சென்று உண்டு வாழ்கின்றன. அதுபோல் நாம் வாய்ப்புள்ள இடத்தைத் தேடிச் சென்று உழைத்து உயர்வதே சிறப்பானது.

நேர்மையான உழைப்பு:

            நம் உழைப்பு நேர்மையானதாய் இருக்க வேண்டும். பிறர் பாராட்டும்படி உழைக்க வேண்டும். உழைக்காமல் பெற்ற பொருள் நமக்கு நிலைக்காது. இக்கருத்தை, ‘உழைக்காதப் பணம் கைசேராது’ என்ற பழமொழி கூறுகிறது.

முடிவுரை:

            செய்யும் தொழிலைத் தெய்வமாய் மதித்து, நம் வாழ்க்கையில் உழைத்தால் வெற்றி நிச்சயம் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். எந்த தொழிலானாலும் அதை ஈடுபாட்டோடு செய்வோம். அது நிச்சயம் நம்மை உயர்த்தும்.

                        உழைப்போம் உயர்வோம்!

                                                நாட்டை வளப்படுத்துவோம்!

 

 

புத்தகம் வாங்கி அனுப்புமாறு உறவினர் ஒருவருக்குக் கடிதம் எழுதுக

                9, முல்லை வீதி

                முத்தியால்பேட்டை

                புதுவை

                22.2.2021.

அன்புள்ள மாமாவுக்கு,

            இனியன் எழுதிக் கொள்வது. நலம். நலம் அறிய ஆவல். நாங்கள் சென்ற ஆண்டு உங்கள் இல்லத்துக்கு வந்து இருந்த போது தாங்கள் என்மீது செலுத்திய அன்பும் பாசமும் என்னை நெகிழச்செய்தன.

            நான் இந்த ஆண்டு நடந்த எல்லாத் தேர்வுகளிலும் வகுப்பிலேயே முதல் மதிப்பெண் பெற்றுள்ளேன். விளையாட்டுப் போட்டிகளிலும் முதலிடம் பெற்றுள்ளேன். என்னை என் பள்ளி ஆசிரியர்களும், வீட்டில் உள்ள அனைவரும் பாராட்டினர். எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

            எனக்கு மூன்று நூல்கள் தேவைப்படுகின்றன. இங்குள்ள கடைகளில் கிடைக்கவில்லை. 1 பொதுக்கட்டுரை (மலர்), 2 திருக்குறள், 3 தமிழாற்றுப்படை ஆகிய நூல்களை வாங்கி அனுப்புமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

                இப்படிக்கு

            தங்கள் அன்புள்ள,

                இனியன்

உறைமேல் முகவரி

பெறுநர்:

            ச. பாண்டியன் அவர்கள்

            10, தாழை வீதி

            அடையாறு

            சென்னை  13.

 

நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்களின் பங்கு

முன்னுரை:

            ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாய் இருப்பவர்கள் அந்நாட்டின் இளைஞர்கள். புதிய சிந்தனைகள், மேம்பட்ட திறன்கள், நவின உத்திகளைக் கையாளுதல் போன்ற பன்முகத் திறன் கொண்டவர்கள் இளைஞர்கள். அதனால்தான், சுவாமி விவேகானந்தர் ‘இளைஞர்கள் கைகளில் நாடு உள்ளது’ என்று இளைஞர்களின் சக்தியை உலகுக்கு உணர்த்தினார்.

தொண்டு:

            இளைஞர்கள் சமுதாய உணர்வு உடையவர்களாய் வளர்ந்தால் தான் வீடும், நாடும் நலம் பெறும். பிற உயிரினங்களின் துன்பத்தைக் கண்டு அதனைத் தாங்கிக்கொள்ளாமல் ஓடிச் சென்று உதவுவதுதான் தொண்டு.

இளைஞர்களின் பங்கு:

            வறுமை, கல்வி இன்மை, அறியாமை, சாதி மத வேறுபாடுகள், தீண்டாமை, மூடப்பழக்க வழக்கங்கள் ஆகிய கொடுமைகளால் சமுதாயம் சிதைந்துள்ளது. குறிப்பாகச் சிற்றூர்களில் வாழும் மக்கள் மிகவும் பின்தங்கி உள்ளனர். இளைஞர்கள் சமுதாயத்தின் மேம்பாட்டுக்கானச் செயல்களைச் செய்யவேண்டும்.

பிற பணிகள்:

            படித்து முடித்தவுடன் அயல் நாடுகளுக்குச் சென்று வேலை பார்பதைவிடத் தாய் நாட்டில் வேலை பார்த்து நம் நாட்டின் தரத்தை உயர்த்த வேண்டும். புயல், வெள்ளம் போன்ற காலங்களில் மீட்புக் குழுவோடு சேர்ந்து பணியாற்ற வேண்டும். காலரா, பன்றிக்காய்ச்சல், சிக்குன் குனியா போன்ற நோய்கள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும்.

முடிவுரை:

            இன்றைய இளைஞர்கள் இந்தியாவை வல்லரசாய் மாற்றும் திறமை படைத்தவர்கள். நாட்டின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு இளைஞர்கள் தனித்திறமைகளைப் பயன்படுத்தினால் விரைவில் நாம் வளர்ந்த இந்தியாவை, வல்லரசு இந்தியாவை உருவாக்க முடியும்.