முன்னுரை:
தமிழ் இலக்கிய உலகில் தனி முத்திரை பதித்தவர், பாரதியார். ‘செந்தமிழ்த் தேனி’, ‘சிந்துக்குத் தந்தை’ என்று பாரதிதாசனால் பாராட்டப்பெற்ற பாரதியே நான் விரும்பும் கவிஞர் ஆவார்.
தோற்றம்:
பாரதியார், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டையபுரத்தில் 1882ஆம் ஆண்டு திசம்பர் திங்கள் 11ஆம் நாள் பிறந்தார். இவருடைய பெற்றோர் சின்னச்சாமி –
இலக்குமி அம்மையார் ஆவர்.
தமிழ்ப் பற்று:
பாரதியார், வடமொழி, ஆங்கிலம், இந்தி, வங்காளம் முதலிய மொழிகளில் புலமை பெற்றவர். அதனால்,
“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
இனிதாவது எங்கும் காணோம்”
என்று தமிழ் மொழியின் சிறப்பைப் பாடியுள்ளார்.
“சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே –
அதைத்
தொழுது படித்திடடி பாப்பா”
என்று தமிழ் மொழியின் உயர்வைப் பாடுகிறார், பாரதியார்.
விடுதலை வேட்கை:
பாரதியார், அனல் கக்கும் பாடல் அடிகளால் தமிழ் மக்களிடையே விடுதலை உணர்வை ஊட்டினார்.
“ஆடுவோமே - பள்ளுப் பாடுவோமே!
ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட் டோமென்று”
என்று இந்திய விடுதலைக்கு முன்பே பாடிக் களித்தார்.
“ஆயிரம் உண்டிங்கு சாதி – எனில்,
அன்னியர் வந்து புகல் என்ன நீதி?”
என்று பாரதியார், ஆங்கில ஆட்சியின் அடக்குமுறையை எதிர்த்துக் குரல் எழுப்பினார்.
முடிவுரை:
தமிழ் இலக்கிய வானில் ஒளி வீசித் திகழ்ந்தவர் ‘தேசியக் கவி’ பாரதியார். அவர், தம் சுவைமிக்க கவிதைகளால், தாய் நாட்டின் விடுதலைக்கும் சமூக நீதிக்கும் பெண்ணுரிமைக்கும் முழக்கமிட்டார். அதனால், நான் விரும்பும் கவிஞராக பாரதியார் திகழ்கிறார். பாரதியின் கனவுகளை நனவாக்குவோம்!.
No comments:
Post a Comment