Saturday, 7 December 2019

தாய்மொழிப் பற்று


முன்னுரை:
          நம்மைப் பெற்றத் தாயைவிட உயர்வானது நம் தாய்மொழி. ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் தாய்மொழியே உயிரைக் காட்டிலும் சிறப்பானது. தாய்ப்பாலுடன் கலந்து ஊட்டப் பெறுவது தாய்மொழி. அதைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
மொழி பற்றிய விளக்கம்:
          மனிதன் தன் எண்ணங்களை, மனித உணர்ச்சிகளை பிறருக்கு வெளிப்படுத்துவதற்காக அவனால் உருவாக்கப்பட்டதே மொழியாகும். வாயினால் பேசப்படுவதுப் பேச்சு மொழியாகும். வரி வடிவில் எழுதப்படுவது எழுத்து மொழியாகும்.
தாய் மொழி:
          நாம் பிறந்தது முதல் அறிந்து, பேசிக்கொண்டிருக்கும் மொழியைத் தாய்மொழி என்கிறோம். அவரவர் தாய்மொழி அவரவர்க்கு உயர்வானதே. பல மொழிகள் கற்றவராயினும் ஒருவரது சிந்தனை அவர்தம் தாய்மொழியிலேயே அமையும். உலகின் சிறந்த சிந்தனையாளர்கள் யாவரும் தம் தாய்மொழியிலேயே தத்தம் கருத்துகளை நூல்களாகப் படைத்துள்ளனர்.
தாய்மொழிப் பற்று:
          ஒரு மொழி வாழ்ந்தால்தான் அம்மொழி பேசும் இனம் வாழும்; மொழி வீழ்ந்தால் இனம் வீழும் என்பது உண்மையாகும். ‘தன்னைப் பழித்தவனைத் தாய் தடுத்தால் விட்டுவிடு; தமிழைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடாதே!’ என்பார் பாவேந்தர்.
தாய்மொழிப் பற்றுக்கொண்ட சான்றோர்:
          வீரமாமுனிவர், கால்டுவெல், மறைமலை அடிகளார், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, சோமசுந்தரபாரதியார், கதிரேசன் செட்டியார், இரா.பி. சேதுப்பிள்ளை, திரு.வி.க., உ.வெ.சா., பாரதியார், பாரதிதாசன், தேவநேயப்பாவாணர், மு.வரதராசனார்  போன்றோர் தணியாத தாய்மொழிப் பற்றுக்கொண்ட சான்றோராவர்.
நமது கடமை:
          நாடும் மொழியும் நமது இரு கண்கள் போன்றவை. இவ்விரண்டன் மீதும் பற்றுக்கொள்ளாதவன் மனிதனே அல்லன். ஒரு மொழியை வாழ்வாங்கு வாழச் செய்யும் கடமை அதனைப் பேசும் ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு.
முடிவுரை:
          மிகப் பழமையானதாய் விளங்கும் நம் தாய்மொழியின் மீது பற்றுக்கொள்ள வேண்டும். நம் தாய்மொழியாம் தமிழை வளர்ப்போம்; நாமும் வளர்வோம்.

No comments:

Post a Comment